Thursday 18 June 2015

திருச்சியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தமிழாசிரியர் கைது!

திருச்சி: திருச்சியில் 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த தமிழ் ஆசிரியரை திருச்சி உறையூர் போலீசார் கைது செய்தனர். பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி உறையூரில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துடன் செயல்படக்கூடிய அரபிந்தோ இண்டர் நேஷனல் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அம்மாப்பேட்டையை சேர்ந்த ரூபன் தமிழாசிரியராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை பள்ளி தொடங்கி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது பள்ளி இடைவேளையின்போது, 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அந்த மாணவியை பின்தொடர்ந்து ஆசிரியர் ரூபனும் உள்ளே சென்று, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதனால் பயந்து போன மாணவி கழிவறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். அதன்பிறகு பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் இது பற்றி கூறி உள்ளார். இதைகேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இது பற்றி முறையிட்டனர். உடனே ஆசிரியர் ரூபனை அழைத்து விசாரித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். இதற்கு இடையில் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபட்டதும் இது பற்றி உறையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த உறையூர் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அங்கு மாணவியின் பெற்றோரிடமும், ஆசிரியர் ரூபனிடமும் விசாரித்தனர். பின்னர் பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனையிட்டனர். அப்போது அந்த கேமராவில் மாணவி கழிவறைக்கு சென்றதும், அவரை பின்தொடர்ந்து ஆசிரியர் ரூபனும் பதுங்கி, பதுங்கி உள்ளே சென்றதும் பதிவாகி இருந்தது. அதன்பிறகு சில நிமிடத்தில் மாணவி கழிவறையில் இருந்து அலறி கொண்டு வெளியே ஓடி வந்ததும், இதையடுத்து ரூபனும் கழிவறையில் இருந்து வெளியே சென்றதும் தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கண்ட பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

ஆசிரியர் ரூபனை சரமாரியாக தாக்கினார்கள். உடனே உறையூர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் ரூபனை கைது செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

Share

& Comment

 

Copyright © 2015 Tamil Engine™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.